கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரை தேச விரோதி என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்தார். இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஹெச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நாகரீகமான அரசியலையும், ஆரோக்கியமான விவாதங்களையும் விரும்புகிறோம் என்று கூறி வரும் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர்கள் திரு.எச்.ராஜா போன்றவர்களின் பேச்சுக்களுக்கு எப்படி ஆக்கமும் ஊக்கமும் அளித்து, அவருக்கு ரயில்வே துறையிலும் அரசு பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியின் திருவுருமாக இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வாழும் தந்தை பெரியார் அவர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி பேசிய திரு. எச். ராஜா பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா அவர்களின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் கொடூரமாக மிரட்டினார். இப்போது சோனியா காந்தியை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் “நீ இந்திய விரோதி” என்று ஆவேசமாகவும், ஆணவமாகவும் கை நீட்டிப் பேசுகிறார். “நாம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம், மிரட்டும் தொனியில் பேசலாம், நம்மை யார் என்ன செய்ய முடியும்?’ என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்து திரு. எச். ராஜா விடுபட முடியாமல் தவித்து வருவதாகவும் மு.க. ஸ்டாலின் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘தேசபக்தி’ என்பதும் ‘இந்தியன்’ என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை ‘தேச விரோதிகள்’ என்றும் ‘இந்திய விரோதிகள்’ என்றும் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் திரு. எச். ராஜா போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.



No comments:
Post a Comment